கோவை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் அதிகாரி பலி கணவருடன் நடைப்பயிற்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்


கோவை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் அதிகாரி பலி கணவருடன் நடைப்பயிற்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்
x
தினத்தந்தி 19 Jan 2020 9:30 PM GMT (Updated: 19 Jan 2020 8:09 PM GMT)

கோவை வனப்பகுதியில் கணவருடன் நடைப்பயிற்சிக்கு சென்ற தனியார் ஆஸ்பத்திரி பெண் அதிகாரியை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, 

கோவை வனப்பகுதியில் கணவருடன் நடைப்பயிற்சிக்கு சென்ற தனியார் ஆஸ்பத்திரி பெண் அதிகாரியை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண் அதிகாரி

கோவை கணபதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது40). இவர் கோவை சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாக பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் பிரசாந்த் (45). இவர் இரும்புக்கடை நடத்தி வருகிறார்.

புவனேஸ்வரி, பிரசாந்த் தம்பதியர், தங்களது நண்பர்கள் உள்பட 8 பேருடன் கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதிக்கு நேற்று காலை நடைபயிற்சிக்காக சென்றனர்.

அவர்கள் சாலையோரத்தில் தங்கள் கார்களை நிறுத்தி விட்டு காட்டுக்குள் நடைப்பயிற்சி சென்றனர்.

காட்டு யானை மிதித்து கொன்றது

அவர்கள், பாலமலை-குஞ்சூர் சாலையில் பசுமணி என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு எதிரே திடீரென்று காட்டு யானை ஒன்று வந்தது.

அதைப் பார்த்ததும் புவனேஸ்வரி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், அவர்கள் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். ஆனால் காட்டு யானையும், அவர்களை விடாமல் துரத்தியது. இதில், புவனேஸ்வரியால் வேகமாக ஓட முடியவில்லை.

இந்தநிலையில், புவனேஸ்வரியை காட்டுயானை துதிக்கையால் சுற்றி வளைத்து பிடித்து தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அப்போதும், அவரை விடாத காட்டு யானை, காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதைத் தொடர்ந்து யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது.

நெஞ்சை உருக்கிய சோகம்

அதைத் தொடர்ந்து புவனேஸ்வரியின் கணவர் பிரசாந்தும், நண்பர்களும் அவரது உடல் கிடந்த இடத்துக்கு விரைந்தனர். யானை மிதித்துக்கொன்றதால் சிதைந்து போன நிலையில் கிடந்த புவனேஸ்வரியின் உடலைப்பார்த்து அனைவரும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காட்டு யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரசாந்த் உள்ளிட்டவர்களிடம், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்கதை

பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வாழ்ந்து வருகிற காட்டு யானைகள், அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், பொதுமக்களையும் தாக்கி வருகின்றன.

காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிக்குள் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கின்றனர். ஆனாலும், வனப்பகுதிக்குள் அவ்வப்போது நடைப்பயிற்சிக்கு சிலர் செல்வது தொடர்கதையாக உள்ளது. அப்படிப் போய்த்தான் புவனேஸ்வரி, காட்டு யானைக்கு பலியாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story