ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் - அர்ஜுன் சம்பத்


ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் - அர்ஜுன் சம்பத்
x
தினத்தந்தி 22 Jan 2020 2:48 PM GMT (Updated: 22 Jan 2020 2:48 PM GMT)

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

சென்னை,

துக்ளக் பொன்விழாவின் போது பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தனது கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தான் கற்பனையாக எதுவும் பேசவில்லை என்றும் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டார்.

மேலும், தன்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம் என்றும் பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசிய போது, “ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும்” என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்து பேசிய அவர், “ஓ.பி.எஸ்., நல்ல கடவுள் பக்தர், அவரைக்கூட திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது. உண்மையில் அவர் பெரியார் கொள்கை கொண்டவர் அல்ல” என்று கூறினார்.

Next Story