பெரியார் குறித்த பேச்சு : ரஜினிக்கு எதிரான திராவிடர் விடுதலை கழக வழக்கு வாபஸ்


பெரியார் குறித்த பேச்சு : ரஜினிக்கு எதிரான திராவிடர் விடுதலை கழக வழக்கு வாபஸ்
x
தினத்தந்தி 24 Jan 2020 6:45 AM GMT (Updated: 24 Jan 2020 6:45 AM GMT)

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

சென்னை 

துக்ளக் பத்திரிகை பொன் விழாவில் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதற்கு  எதிராக அவர் மீது திக சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டன.  சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில்  கொடுத்த புகார் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பெரியார் பற்றி அவதூறான கருத்துக்களை ரஜினிகாந்த் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்கு முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் என்று நீதிபதி ராஜமாணிக்கம் கூறினார்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதே தவறு என்று கூறினர். இதனை அடுத்து, மனுக்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது.

Next Story