2017ம் ஆண்டில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்விலும் முறைகேடு?

2017ம் ஆண்டில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை,
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 16½ லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிந்தது. அதிலும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வு எழுதி இருந்ததும், அவர்கள் அனைவரும் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் குரூப்-4 தேர்வில் தில்லுமுல்லு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரித்தபோது குரூப்-4 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி என்று தெரிந்தது. இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 99 பேர் அழியும் மை மூலம் தேர்வு எழுதியது தெரிந்தது. அந்த 99 பேரும் தலா ரூ.9 லட்சம், ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்து தங்களது விடைத்தாளை மாற்ற செய்துள்ளனர். தேர்வுத்துறை ஊழியர்கள் உதவியுடன் இடைத்தரகர்கள் கும்பல் விடைத்தாள்களை மாற்றி உள்ளது.
99 பேரிடமும் ரூ.12 கோடி வரை பணம் வாங்கிய மோசடி கும்பலால் 39 பேரின் விடைத்தாள்களையே மாற்ற முடிந்தது. அந்த 39 பேரும் குரூப்-4 தேர்வில் மாநிலத்தில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மோசடி செய்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. தேர்வு எழுதிய 3 பேர் உள்பட 9 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தனர். இன்று மேலும் மூன்று பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர். தற்போது வரை கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில், 2017ம் ஆண்டில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 6 மையங்களில் 37 பேர் தேர்வாகி உள்ளனர். குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள திருக்குமரன் இந்த மையத்தில் தான் தேர்வாகி உள்ளார். இதனால் குரூப்-4 தேர்வை போன்று குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
Related Tags :
Next Story