தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா; முதல் அமைச்சருக்கு விழாக்குழுவினர் அழைப்பு


தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா; முதல் அமைச்சருக்கு விழாக்குழுவினர் அழைப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 1:35 PM GMT (Updated: 28 Jan 2020 1:35 PM GMT)

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வருகை தரும்படி முதல் அமைச்சர் பழனிசாமிக்கு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தஞ்சை,

தஞ்சை பெரிய கோவில், 1010 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த கோவிலில் கடந்த 1996-ம் ஆண்டு குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடந்தது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி (புதன்கிழமை) காலை குடமுழுக்கு நடக்க இருக்கிறது. இதையொட்டி கோவிலில் தொல்லியல்துறை, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வருகை தரும்படி, முதல் அமைச்சர் பழனிசாமிக்கு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.  இதற்காக சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல் அமைச்சரை சந்தித்து விழா அழைப்பிதழை விழாக்குழுவினர் வழங்கினர்.

Next Story