வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது; உள்ளாட்சி தேர்தல் பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம்


வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது; உள்ளாட்சி தேர்தல் பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம்
x
தினத்தந்தி 28 Jan 2020 4:35 PM GMT (Updated: 28 Jan 2020 4:35 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்ற பகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரியும், தள்ளி வைக்கப்பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் 10 ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தக்கோரியும் தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு கடந்த 20ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘சேலம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களின் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, தி.மு.க. தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதி, தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதா? அவை தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் மூத்த வக்கீல், ‘கண்காணிப்பு கேமரா பதிவுகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது வரை அந்த பதிவுகளை ஆய்வு செய்யவில்லை’ என்று பதில் அளித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.  இதில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளன.  அதனால் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

Next Story