கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 8:26 PM GMT)

கொரோனா வைரஸ் பரவிவரும் சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேரை பொது இடங்களுக்கு செல்ல சுகாதாரத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கோவை, 

கொரோனா வைரஸ் பரவிவரும் சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேரை பொது இடங்களுக்கு செல்ல சுகாதாரத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரசின் தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானநிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.

விமான நிலையத்தில் அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சோதனையில் 8 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது எனவும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

சீன நாட்டிற்கு சென்று வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கோவை விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவ குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

சீனாவுக்கு தொழில் ரீதியாகவும், சுற்றுலாவுக்காகவும் சென்ற 8 பேர் கோவை வந்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 பேரை இங்குள்ள சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். சென்னையை சேர்ந்தவர் குறித்து சென்னை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்தவர் குறித்து திண்டுக்கல் சுகாதாரத்துறை அதிகாரிக் கும் தகவல் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story