தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 8-ந்தேதி நடக்கிறது


தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 8-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 28 Jan 2020 9:45 PM GMT (Updated: 28 Jan 2020 8:31 PM GMT)

தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 8-ந்தேதி நடக்கிறது.

சென்னை, 

தென்காசி மாவட்டம் கடையத்திற்கு அருகே தென்காசி செல்லும் பாதையில் இயற்கை எழிலோடு அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். 994 படிகளுக்கு மேல், மலை உச்சியில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

தோரணம் போல் மலை அமைந்த காரணத்தால் தோரணமலையாக ஸ்தலம் விளங்குகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும் பிப்ரவரி 8-ந்தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம் நடக்க உள்ளது. 7.30 மணிக்கு தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் படத்திறப்பு விழா நடக்கிறது. படத்தை டாக்டர் தர்மராஜ் திறந்து வைக்கிறார்.

காலை 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து திருமண வைபோக அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 1,008 சரவண ஜோதி திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

மாலையில் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story