குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்


குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை  -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 29 Jan 2020 8:13 AM GMT (Updated: 29 Jan 2020 9:48 AM GMT)

குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை

குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா மற்றும் டிஎன்பிஎஸ்சி  அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முறைகேடு புகார் வந்தவுடன் தாமதமின்றி விசாரணை நடத்தப்பட்டது.  குறைகள் இல்லாமல் போட்டி தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்த முறைகேடு புகாரால் டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கக்கூடாது. தவறு செய்த கறுப்பு ஆடுகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு செய்தவர்கள் பெரும் புள்ளியாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு இழைத்தவர்கள் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. வருங்காலங்களில் முறைகேடின்றி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படும்.

ஒரு சில மையங்களில் நடந்த முறைகேட்டால் ஒட்டுமொத்தமாக குறைகூற கூடாது.

தரவரிசைப் பட்டியலில் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு இல்லை. 16 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வை 99 பேருக்காக ரத்து செய்வது நியாயமாக இருக்காது. போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வரப்படும் என கூறினார்.

Next Story