போலீஸ் நிலையங்களில் 2 மாதங்களுக்குள் தனிப்பிரிவுடி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு


போலீஸ் நிலையங்களில் 2 மாதங்களுக்குள் தனிப்பிரிவுடி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jan 2020 10:15 PM GMT (Updated: 30 Jan 2020 8:11 PM GMT)

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் 2 மாதங்களுக்குள் தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையை சேர்ந்தவர் மருதாச்சலம். இவர், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குறித்து அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதுகுறித்து கொடுக் கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருதாச்சலத்தை கைது செய்தனர்.

இதையடுத்து ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐகோர்ட்டு நீதிபதி குறித்து அவதூறான, ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட்ட மனுதாரருக்கு நீதிபதி எம்.தண்டபாணி கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபோலத்தான் சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று போலீஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இறுதி விசாரணைக்காக வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் தான் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், அந்த பதிவை நீக்கி விடுவதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அண்மை காலங்களில் சமூக வலைதளங்களில் தனிநபர்களை குறித்து அவதூறான தகவல்கள் பரப்பும் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக தனி நபர்கள் மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உயர் பதவிகளை வகிப்பவர்கள் மீதும் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படு கிறது.

அரசியல் அமைப்புச்சட்டம், ஒருவருக்கு பேச்சுரிமை, கருத்துரிமை வழங்கியுள்ளது. அதே அரசியல் அமைப்புச்சட்டம் தான், ஒருவர் கண்ணியத்துடன் சமூகத்தில் வாழ பாதுகாப்பு வழங்குகிறது. எனவே, அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனால், சமூக வலைதளங்களில் அவதூறான, ஆபாசமான கருத்துகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிடுகிறேன். அதேபோல, மாநில, மாவட்ட அளவிலும் இதுபோல தனிப்பிரிவுகளை உருவாக்க வேண்டும். இந்த பிரிவுகளில் நியமிக்கப்படும் போலீஸ் அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

அப்போது தான் அந்த ஆபாச, அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கவும், உரியவர்களை கைது செய்யவும் முடியும். எனவே, 2 மாதங்களுக்குள் இந்த தனிப்பிரிவை உருவாக்கி தமிழக டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்தி விட்டு, அதுகுறித்து அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற மார்ச் 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story