இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் சுற்றுப்புறசூழலை பாதுகாக்க பூமி வந்தனம் பூஜை மாணவ, மாணவிகள் பங்கேற்பு


இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் சுற்றுப்புறசூழலை பாதுகாக்க பூமி வந்தனம் பூஜை மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 Jan 2020 9:00 PM GMT (Updated: 30 Jan 2020 8:29 PM GMT)

சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கும் வகையில் பூமி வந்தனம்- கங்கா வந்தனம் பூஜை நடந்தது.

சென்னை, 

சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கும் வகையில் பூமி வந்தனம்- கங்கா வந்தனம் பூஜை நடந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ‘பூமி வந்தனம்- கங்கா வந்தனம்’ என்ற தலைப்பில் சுற்றுப்புறசூழலை பேணி காக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நாம் வாழும் பூமியை பாதுகாப்பதுடன், தண்ணீரின் பயன்பாடு, சிக்கனம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இளையதலைமுறையினர் முழுமையாக இதனை கடைப்பிடிக்கும் வகையில் 1,008 பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுப்புறசூழலை பாதுகாப்பதற்காக 2 சிறிய மண் பானைகளை வைத்து பூஜை செய்தனர். இதில் தண்ணீர் நிரப்பிய பானையை கங்காதேவியாகவும், மண் நிரப்பிய பானையை பூமாதேவியாகவும் உருவகப்படுத்தி மாணவிகள் பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை செய்தனர்.

சுற்றுச்சூழலை பராமரித்தலை வலியுறுத்தி பஞ்சாப் அசோசியேஷன் பள்ளி மாணவ-மாணவிகள் காளிங்க நர்த்தனம் ஆடினர். பூமி மற்றும் தண்ணீரை பாதுகாக்க வேண்டி மாணவிகள் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

மேலும் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. இதேபோல் ஆரிய சமாஜ் கல்வி அறக்கட்டளை மாணவர்கள் பண்பு சார்ந்த ஹோமம் நடத்தினர்.

கேரள மாநில பெண்கள் 500 பேர் திருவாதிரை களி நடனமும், மோகினி ஆட்டமும் ஆடி அசத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கொடைக்கானல் பழங்குடியின மக்கள் சிறிய வகை நாதஸ்வரம் போன்ற கருவியை வைத்து நடத்திய இசைநிகழ்ச்சி கண்காட்சியை அதிர வைத்தது.

2-ம் நாளான நேற்று 2 லட்சம் பேர் ஆன்மிக கண்காட்சியை பார்வையிட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) பெண்மையை போற்றுதல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. மேலும் லட்சுமி குபேர ஹோமம், லட்சுமி குபேர பூஜை மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணமும் நடக்கிறது.

கண்காட்சி ஏற்பாடுகளை துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பண்பு மற்றும் கலாசார முனைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் ‘தினத்தந்தி’ அரங்கு இடம் பெற்றுள்ளது. ‘எச்’ வரிசையில் 12-வது அரங்காக இடம்பெற்றுள்ள அதில் வரலாற்று சுவடுகள், விதியை மாற்றும் 40 சித்தர்கள், நோய் தீர்க்கும் சிவாலயங்கள், 27 நட்சத்திர தலங்கள் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ‘தினத்தந்தி’யின் ஆங்கில பதிப்பான ‘டி.டி. நெக்ஸ்ட்’ பத்திரிகையை ரூ.299 ஆண்டு சந்தா செலுத்தி ஆண்டு முழுவதும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சலுகை திட்டமும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் திரளாக பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கியும், சந்தா செலுத்தியும் செல்கின்றனர்.

Next Story