புதிய கல்வி கொள்கை குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் விவாதம் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


புதிய கல்வி கொள்கை குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் விவாதம் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Feb 2020 7:45 PM GMT (Updated: 2 Feb 2020 7:19 PM GMT)

புதிய கல்வி கொள்கை குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரம் சார்ந்த புதிய அறிவிப்புகளுடன் கல்வி சார்ந்த அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்பதுதான் அதுவாகும். மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேவையற்றது ஆகும்.

வரைவு கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள எதிர்மறையான அம்சங்களை நீக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். அதை உறுதி செய்ய வேண்டியது மாணவர் நலனில் அக்கறையுள்ள கட்சிகளின் பணியாகும்.

வரைவுக் கல்வி கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்டுள்ள யோசனைகளில் எவ்வளவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது?, மாணவர்கள் நலனுக்கு எதிரான திட்டங்களில் எத்தனை நீக்கப்பட்டுள்ளன? என்பன போன்றவற்றை முழுமையாக அனைவருக்கும் தெரிவித்த பிறகு தான் புதிய கல்வி கொள்கை வெளியிடப்பட வேண்டும். அதற்கு முன்பாக மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்வி கொள்கையை வெளியிடுவது முறையல்ல.

எனவே, வரைவு தேசியக் கல்வி கொள்கை மீது எவ்வளவு கருத்துரைகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டன; அவற்றில் எத்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும். அதில் கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story