வழக்கை திரும்ப பெறவேண்டும் என்ற சசிகலாவின் மனுவுக்கு வருமான வரித்துறை பதில் அளிக்கவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


வழக்கை திரும்ப பெறவேண்டும் என்ற சசிகலாவின் மனுவுக்கு வருமான வரித்துறை பதில் அளிக்கவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Feb 2020 10:30 PM GMT (Updated: 5 Feb 2020 10:08 PM GMT)

வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று சசிகலா தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் குறைபாடு உள்ளதாக கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்தது. இந்தநிலையில், ரஜினிகாந்துக்கு எதிரான இந்த வழக்கை வருமான வரித்துறையே அண்மையில் திரும்ப பெற்றுக்கொண்டது.

அப்போது, ‘ரூ.1 கோடிக்கு குறைவான அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ரஜினிகாந்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1 கோடிக்கு குறைவானது என்பதால், அவரது வழக்கை திரும்ப பெறுவதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை காரணம் கூறியது. இதை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு, வழக்கை திரும்ப பெற அனுமதித்தது.

இந்தநிலையில், இதே சலுகையை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, கடந்த 1994-95-ம் ஆண்டுக்கான சசிகலாவின் சொத்து விவர பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறைக்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில் கணக்கிட்ட வருமான வரித்துறை, ரூ.48 லட்சம் செலுத்த வேண்டும் என்று சசிகலாவுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சசிகலா வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சசிகலா தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், வருமான வரித்தொகை ரூ.1 கோடிக்கு கீழ் உள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே எனக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த மனுவுக்கு வருமான வரித்துறையின் கருத்தை கேட்டு தெரிவிக்க 2 வாரம் காலஅவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சசிகலாவின் மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Next Story