காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் - அமைச்சரவை ஒப்புதல்


காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் - அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 6 Feb 2020 10:00 PM GMT (Updated: 6 Feb 2020 9:58 PM GMT)

காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை, 

சென்னை மீனம்பாக்கத்தில் பிரமாண்ட விமான நிலையம் இயங்கி வருகிறது. உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிலையம் என 2 சேவைக்கான நிலையங்களும் அங்கு இயங்குகின்றன. இந்திய அளவில் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலின் சென்னை விமான நிலையம் முன்னிலை வகிக்கிறது.

இந்த விமான நிலையத்தை ஜி.எஸ்.டி. சாலை, புறநகர் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் வசதி ஆகிய 3 வழிகள் மூலம் அடையலாம். இந்த மூன்று வழிகளுமே மீனம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளன. இதில் விரைவாகவும், தடங்கல் இன்றியும் விமான நிலையத்தை அடைய மெட்ரோ ரெயிலை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதற்காக சென்னைக்கு அருகே 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான முடிவை தமிழக அரசு எடுத்தது.

அதன்படி முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’-ல், ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கும் தமிழக அரசு தெரிவித்து வந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று இந்திய விமான நிலைய ஆணையம் காஞ்சீபுரத்தை அடுத்துள்ள பரந்தூர் உள்ளிட்ட சில இடங்களை ஆய்வு செய்தது. அதில், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான ஒப்புதலை விமான நிலைய ஆணையம் வழங்கியது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 4-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு உகந்த பகுதிகளாக சுங்குவார்சத்திரம் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்கள் முன்வைக்கப்பட்டன. இதுபற்றி அமைச்சரவையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர், விமான நிலையம் அமைப்பதற்கான இடமாக பரந்தூர் முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது.

இந்த 2-வது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் பரந்தூருடன், வலத்தூர், மேலப்பொடவூர் ஆகிய கிராமங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கி விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இந்த விமான நிலையம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட உள்ளது.

இந்த விமான நிலையம் அமைப்பதற்கு 4,500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் ஏற்படும் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த அளவுக்கான நிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது.

2-ம் விமான நிலையம் அமையும் பகுதியை, விமான நகரமாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. விமான பராமரிப்பு பகுதிகள், பல்வேறு வசதிகளுடன் கூடிய துணை நிலையங்கள், விமான போக்குவரத்து தொழிலுக்கான இடவசதிகள், உணவகங்கள், சரக்கு கையாளும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு இடம் பெறும்.

இந்த விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் 50 சதவீத இடங்கள் அரசு நிலமாக உள்ளன. மீதமுள்ள 50 சதவீத நிலத்தை தனியாரிடம் இருந்து கையகப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன. இதற்காக தனி அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story