சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நேரத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு


சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நேரத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 7 Feb 2020 10:30 PM GMT (Updated: 7 Feb 2020 9:05 PM GMT)

சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நேரத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல் களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் இளைய அருணா இல்லத் திருமண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்ததுடன், மீனாட்சியம்மன் பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.

முன்னதாக, திருமண விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்றைக்கு நாட்டில் பல கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 15 நாட்களாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ‘பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ என்று சொல்லக்கூடாது. ‘பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்’ என்றுதான் சொல்ல வேண்டும். 2014-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதைத் தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை. இதற்கு புரோக்கர் ஜெயக்குமார் முக்கிய காரணம். புரோக்கர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தானாக முன்வந்து ஆஜராக வேண்டிய அவசியம் என்ன? அங்கு தான் சூழ்ச்சி இருக்கிறது. உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். முறைகேடுகள் அமைச்சர்கள் வாயிலாக, முதல்- அமைச்சரின் உத்தரவுடன் நடந்திருக்கிறது என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.

அந்தத் துறையின் அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், அப்போது உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். முறைகேடுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கொள்ளையடிப்பதிலும், முறைகேட்டில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியிலும் தான் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆகவே, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும், ஊழல்கள், அக்கிரமங்கள், கொலைகள், கொள்ளைகள், லஞ்சம் அனைத்தையும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் ஒன்று விடாமல் மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம். அது மட்டுமல்ல; அதற்குரிய தண்டனையையும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உரியவர்களுக்குப் பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story