சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஊக்க தொகை; முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.
சேலம்,
சேலம் வாழப்பாடியில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல் அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, உதயகுமார், தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர் சீனிவாசன், ரூபா குருநாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதன்பின் பேசிய பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் திறக்கப்பட்ட புதிய சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தில் விரைவில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படும். இந்த ஐ.பி.எல். போட்டிகளில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என கூறினார்.
இதன்பின்னர் முதல் அமைச்சர் பழனிசாமி பேசும்பொழுது, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம் வழங்கியவர் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா. சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகிறது.
இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இணையாக தமிழக விளையாட்டு ஆணையம் உள்ளது. சேலத்தில் திறக்கப்பட்டு உள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த புதிய மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என கூறினார்.
இதனை தொடர்ந்து, கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச, முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டிங் செய்து விளையாடினார்.
Related Tags :
Next Story