ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு முடித்து வைப்பு ; உச்ச நீதிமன்றம்


ஓபிஎஸ் உள்ளிட்ட  11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு முடித்து வைப்பு  ; உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 14 Feb 2020 6:23 AM GMT (Updated: 14 Feb 2020 9:04 AM GMT)

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என்று நம்புவதாக கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.  மேலும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது  என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அதே நேரத்தில், நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையயும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.


வழக்கின் விவரம் ;-
;
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் 11 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும்  அவர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். 

ஆனால், பேரவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்பட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

Next Story