சசிகலாவின் பினாமி என்று அனுப்பிய நோட்டீசை ரத்துசெய்ய வேண்டும் - தொழில் அதிபர் வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சசிகலாவின் பினாமி என்று அனுப்பிய நோட்டீசை ரத்துசெய்ய வேண்டும் - தொழில் அதிபர் வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2020 9:15 PM GMT (Updated: 14 Feb 2020 8:58 PM GMT)

சசிகலாவின் பினாமி என்று அறிவித்து அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி தொழில் அதிபர் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் பங்குதாரரான கங்கா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் எஸ்.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

2011-ம் ஆண்டு நில உரிமையாளர்களுடன் இணைந்து கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில் பெரம்பூரில் ஸ்பெக்ட்ரம் வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த மாலில் எங்களது நிறுவனத்துக்கு 65 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இந்த வணிக வளாகத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்கள் என்று கூறிக்கொண்டு சிலர் அழுத்தம் கொடுத்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு வக்கீல் செந்தில் என்பவர் எங்கள் நிறுவனத்தை ரூ.200 கோடிக்கு விலைபேசி இறுதியாக ரூ. 192.50 கோடி வழங்க ஒப்பந்தம் செய்தார். அந்த நேரத்தில் மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது எனக்கூறி பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தது.

இதனால், பண பரிவர்த்தனைகளை 2017-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளலாம் என தெரிவித்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. 2016 டிசம்பர் 16-ந்தேதி, ரூ.130 கோடிக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செந்தில் கொடுத்தார்.

இந்த பணத்தை மாற்ற முடியவில்லை என்றால் திருப்பி வாங்கிக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார். அதன்படி ரூ. 86.42 கோடியை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி அவரிடமே திருப்பி கொடுத்து விட்டோம். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தது.

அப்போது எங்களது நிறுவனத்திலும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் ரூ.86.42 கோடியை நாங்கள் திருப்பிக் கொடுத்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் திடீரென எங்களை சசிகலாவின் பினாமி என அறிவித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இதுதொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Next Story