அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யப்படும் குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம்


அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும்   தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யப்படும்   குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம்
x
தினத்தந்தி 16 Feb 2020 12:00 AM GMT (Updated: 15 Feb 2020 11:08 PM GMT)

குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் என்றும், தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி. எஸ்.சி.) நடத்திய குரூப்-4 எழுத்துத் தேர்வில் சிலர் முறைகேடு செய்தது அம்பலம் ஆனது.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறார்கள். இதேபோல், குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, அந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்கின்றனர். தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. பல்வேறு விதிமுறைகளை உருவாக்கி அமல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வு முறையில் சில அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் க.நந்த குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்நிலை, முதன்மை தேர்வுகள்

14.2.2020 (நேற்றுமுன்தினம்) அன்று தேர்வு முறைகளில் செய்யப்பட உள்ள சீர்திருத்தங்கள் குறித்து தேர்வாணைய தலைவர் தலைமையில் தேர்வாணைய குழுமம் கூடி விவாதித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* குரூப்-4, குரூப்-2ஏ போன்ற தேர்வுகளுக்கு பொது அறிவு வினாத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டும் இதுவரை நடந்து வருகிறது. இனி வருங்காலங்களில் இத்தேர்வுகள் இருநிலைகளை கொண்டதாக, அதாவது முதல்நிலை, முதன்மை தேர்வுகளாக நடத்தப்படும்.

* தேர்வு எழுத வரும் தேர்வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்யவும், இதர தேர்வு விதிமுறைகளை தேர்வர்களுக்கு விளக்கும் விதமாகவும் தேர்வர்கள் இனி தேர்வுக் கூடங்களுக்கு காலை 9 மணிக்கே வருகைபுரிதல் வேண்டும். தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். 10 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை, மதியம் இருவேளைகளிலும் தேர்வு இருந்தால், மதியம் நடைபெறும் தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

எல்லா கேள்விகளுக்கும் விடை

* இனிவரும் கொள்குறிவகை தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடை அளிக்க வேண்டும். ஏற்கனவே ஏ, பி, சி, டி என்ற 4 விடைகள் கொடுக்கப்படும். இனிமேல் இந்த 4 விடைகளும் வினாவுக்கான பதிலாக தெரியவில்லை என்றாலோ, விடை அளிக்க முடியவில்லை என்றாலோ அதற்கு கூடுதலாக 5-வது தேர்வாக ‘இ’ என்ற ‘ஆப்ஷன்’ கொடுக்கப்படும். அந்த வட்டத்தினை தேர்வர்கள் வட்டமிட்டு கருமையாக்க வேண்டும்.

தேர்வு இறுதியில் மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு முறையே ஏ, பி, சி, டி மற்றும் இ விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விவரங்களை தனியே பதிவு செய்து அதற்கான உரிய கட்டங்களை நிரப்பவேண்டும். இதற்கென்று 3 மணி நேர தேர்வு முடிந்ததும், 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்படும். இதை குறிக்கத்தவறினால் தேர்வரின் விடைத்தாள் செல்லாததாக கருதப்படும்.

அதேபோல், தேர்வு முடிந்ததும் எந்தவொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் இனங்கான இயலாதவாறு தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதி மற்றும் விடை அளிக்கும் பகுதி தேர்வர்களின் முன்னிலையிலேயே தனித்தனியே பிரித்து தேர்வு அறையிலேயே சீலிடப்படும். அதன் மீது அறையில் இருக்கும் சில தேர்வர்களிடம் கையொப்பம் பெறப்படும்.

பெருவிரல் ரேகை பதிவு

* தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடைத்தாளின் விடை அளிக்கும் பகுதியில் தேர்வரின் கையொப்பத்துக்கு பதிலாக தேர்வரின் இடதுகை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.

* தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்துக்கு எடுத்துவர தற்போதுள்ள நடைமுறை முற்றிலும் மாற்றப்பட்டு அதிநவீன தொழில்நுட்ப ஜி.பி.எஸ். மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணிநேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்.

* தேர்வாணையத்துக்கும், தேர்வர்களுக்கும் இடையிலான பிணைப்பினை உறுதி செய்யவும், தகவல் பரிமாற்றத்தினை மேலும் எளிமைப்படுத்தவும் தேர்வாணைய இணையதளத்தில் ஒரு சிறப்பு தகவல் தளம் விரைவில் உருவாக்கப்படும். தேர்வாணையம் அவ்வப்போது கொண்டுவரும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் குறித்து பின்னூட்டங்களை பெறவும், தேர்வர்கள் தங்களுக்கு தெரியவரும் தகவல்களை தேர்வாணையத்துடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு தகவல் அளிக்கும் தேர்வர்களின் ரகசியத்தன்மை காக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Next Story