கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்து உள்ளன - சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கம்


கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்து உள்ளன - சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கம்
x
தினத்தந்தி 19 Feb 2020 10:30 PM GMT (Updated: 19 Feb 2020 10:06 PM GMT)

கண்காணிப்பு கேமராவால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி (காரைக்குடி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

கே.ஆர்.ராமசாமி:- திருபுவனம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் 2 முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம். மொத்தம் உள்ள 18 இடங்களில் 11 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- உள்ளாட்சி தேர்தல் சரியான முறையில் நடந்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. அங்கு தேர்தல் சரியான முறையில் நடத்தப்படும்.

கே.ஆர்.ராமசாமி:- அங்கு தேர்தலை நிறுத்த மாநில தேர்தல் ஆணையத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதே.?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உள்ளாட்சி தேர்தல் என்பது முழுக்க முழுக்க மாநில தேர்தல் ஆணையம் நடத்துவது. அரசு நடத்துவது அல்ல.

கே.ஆர்.ராமசாமி:- மத்திய அரசு தரவேண்டிய நிதியை ஏன் கேட்டுப்பெறவில்லை. அதற்காக போராட்டம் வேண்டுமானால் செய்வோம். நீங்களும் (அ.தி.மு.க.) வாருங்கள். மத்திய அரசுடன் நீங்கள் காட்டும் நெருக்கத்தால் வாங்காமல் இருப்பது தமிழகத்திற்கு செய்யும் துரோகம்.

ஓ.பன்னீர்செல்வம்:- மத்திய அரசிடம் நிதிக்காக பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. நானும், நிதித்துறை செயலாளரும் நேரில் சென்று கேட்டோம். தருவதாக சொல்லியுள்ளனர். உறுதியாக நிதி வந்து சேரும்.

கே.ஆர்.ராமசாமி:- அம்மா உணவகம் சரியாக நடைபெறவில்லை. நிதி பற்றாக்குறையால் முடங்கியுள்ளன. பல இடங்களில் மூடப்பட்டுள்ளது. எனக்கு சிறிய சந்தேகம் வருகிறது. அம்மாவை (ஜெயலலிதா) நீங்கள் மறந்துவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- அம்மாவை நாங்கள் மறக்கவில்லை. அம்மா உணவகம் எங்கும் நிறுத்தப்படவில்லை. அனைத்து உணவகத்தையும் ஆய்வு செய்தோம். நன்றாக நடக்கிறது. அதற்காக ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:- அம்மாவை மறந்துவிட்டதாக, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சொல்கிறார். அம்மாவின் பெயரில் இன்றைக்கு 5 முத்தான திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். எங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அம்மாவை மறக்க மாட்டோம். உங்கள் தலைவரை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

கே.ஆர்.ராமசாமி:- நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் தான் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். அம்மாவை நாங்கள் மறந்துவிட்டதுபோல் சொல்கிறீர்கள். அதற்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

கே.ஆர்.ராமசாமி:- இப்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதன் மூலம் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுகிறார்கள். இன்னும் அதிகமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சென்னை மாநகரில் 2½ லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு பெருநகரங்களிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் படிப்படியாக பொருத்தப்படும். இதனால், குற்றங்கள் குறைந்துள்ளன. விரைவாக குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரப்படுகிறது.

கே.ஆர்.ராமசாமி:- டி.என். பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு, நீட் தேர்வு என இந்தத் தேர்வுகளில் என்ன நடந்தது.? இதற்கு நீங்கள் தான் பொறுப்பு. தவறு எப்படி நடக்கிறது.?

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- ஆசிரியர் தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை. தவறான தகவலை கொடுக்கக்கூடாது.

அமைச்சர் ஜெயக்குமார்:- டி.என்.பி.எஸ்.சி. என்பது தன்னாட்சி அமைப்பு. நிதி மட்டும் தான் அரசு ஒதுக்குகிறது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story