2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்


2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2020 11:45 PM GMT (Updated: 21 Feb 2020 11:31 PM GMT)

2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? என்பதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை, 

மத்திய அரசு 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதிலாக 2 ஆயிரம், 500 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதற்கு சில்லரை கிடைப்பது சிரமமாக உள்ளது.

இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது இந்தியன் வங்கி ஏ.டி.எம்.களில் மார்ச் 1-ந்தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் நிரப்பப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ள ‘டிரே’ நிரப்பப்படாது என்று தகவல்கள் பரவி வருகிறது.

ஏ.டி.எம்.மில் ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என எடுத்தால் அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகவே வருகிறது. இதனை சில்லரையாக மாற்ற மக்கள் வங்கிக்கு வருகிறார்கள். இதனால் ஏ.டி.எம். கொண்டுவந்ததன் நோக்கமே சிதைகிறது. இதனால்தான் ஏ.டி.எம்.மில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் உறுதி செய்யாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பி.டி.கிருஷ்ணன் கூறியதாவது:-

ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொண்டு வந்தது. ஆனால் அந்த நோட்டை மாற்றுவது என்பது பொதுமக்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

இதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஆனால் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏ.டி.எம். மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் இதனை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை. எனவே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வழக்கம்போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story