மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்களின் விடுதலை ரத்து - குற்றவாளிகள் என ஐகோர்ட்டு அறிவிப்பு


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்களின் விடுதலை ரத்து - குற்றவாளிகள் என ஐகோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2020 11:45 PM GMT (Updated: 21 Feb 2020 11:35 PM GMT)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 அரசு பள்ளி ஆசிரியர்களின் விடுதலையை ரத்துசெய்த சென்னை ஐகோர்ட்டு, அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாகராஜ், புகழேந்தி என்று 2 ஆசிரியர்கள் பணியாற்றினர். இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு தங்களிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் பாதிக் கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு கோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கவில்லை என்றும், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், உள்நோக்கத்தோடு இந்த புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதி கூறியிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட மாணவிகளில், ஒரு மாணவியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தார். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘இந்த வழக்கில் ஆசிரியர்கள் இருவருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு ஆசிரியர்களால் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆதாரம் இல்லை என்ற கீழ் கோர்ட்டு அவர்களை விடுதலை செய்து தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

ஆசிரியர்கள் 2 பேரும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

Next Story