ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது சசிகலா ரூ.168 கோடிக்கு ‘பினாமி’ சொத்துகள் வாங்கியது உண்மை - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்


ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது சசிகலா ரூ.168 கோடிக்கு ‘பினாமி’ சொத்துகள் வாங்கியது உண்மை - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2020 11:45 PM GMT (Updated: 21 Feb 2020 11:44 PM GMT)

ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, சசிகலா ரூ.168 கோடிக்கு ‘பினாமி’ சொத்துகள் வாங்கியது உண்மை என சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை கூறியுள்ளது.

சென்னை,

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா புதிதாக ஏராளமான சொத்துகளை வாங்கினார். அப்போது ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சசிகலா இவ்வாறு பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர் வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் சசிகலா ரூ.1,674 கோடியே 50 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொத்துகளை சில பினாமிகள் மூலமாகவும் வாங்கியிருப்பது தெரியவந்தது. அதில், புதுச்சேரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரை, சசிகலாவின் பினாமி என்று கூறி அவர்களுக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. அவர்களது சொத்துகளை முடக்கம் செய்தது.

இதை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தாங்கள் சசிகலாவின் பினாமிகள் இல்லை என்றும், தங்களுக்கு எதிராக வருமான வரித்துறை எடுத்துள்ள நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

அவர் தன் வாதத்தில், ‘பினாமிகளின் பெயரில் சொத்துகளை வாங்கியது குறித்து சசிகலாவிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இவ்வாறு சொத்துகள் வாங்கியது பினாமி சட்டவிதிகளின்படி குற்றமாகும். அதன் அடிப்படையில் அந்த சொத்துகளை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. சசிகலா வாங்கிய சொத்துகளில், மனுதாரர்களுக்கு சொந்தமான புதுவை அருகே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓசியன் ஸ்பிரே கடற்கரை ரிசார்ட் ஓட்டலும் ஒன்று.

ஓட்டலை சசிகலா ரூ.168 கோடிக்கு வாங்கி இருந்தார். அதற்காக ரூ.148 கோடி பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஓட்டலையும் பினாமி சொத்துகள் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்ய வருமான வரித்துறை ஓசியன் ஸ்பிரே ஓட்டல் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன’ என்று கூறினார்.

ஆனால் மனுதாரர்கள் தரப்பில், ‘பினாமி சொத்து என்ற அடிப்படையில் ஓட்டலை பறிமுதல் செய்ய முடியாது. நாங்கள் சசிகலாவிடம் அந்த ஓட்டலை விற்பதற்கு ஒப்பந்தம் செய்து இருந்தோம். ஆனால், அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் அதை ரத்து செய்து விட்டார்கள். எனவே, அவர்கள் கொடுத்த பணத்தை எங்களிடம் கேட்டு வற்புறுத்தி வந்தனர். இதன் காரணமாக ஓட்டல் விற்பனை இறுதி ஆகவில்லை. ஓட்டலை ரூ.168 கோடிக்கு வாங்குவதாக கடந்த 2016-ம் ஆண்டு சசிகலாவின் பிரதிநிதிகள் 2 பேர் எங்களிடம் விலை பேசினர். அப்போது மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்து இருந்தது. ரூ.135.25 கோடிக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, இதை மாற்ற முடியவில்லை என்றால், திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினர். இதில் ரூ.37 கோடியை எங்களால் மாற்ற முடியவில்லை. இந்த விவரங்கள் அனைத்தையும், வருமான வரித்துறை நடத்திய விசாரணையின்போது கூறியுள்ளோம்’ என்று கூறப்பட்டது.

பின்னர் வருமான வரித்துறை துணை கமிஷனர் திலீப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ரூ.168 கோடிக்கு ஓட்டலை வாங்குவதற்கு சசிகலா மற்றும் அவரது தரப்பில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த ஓட்டல் நிறுவனம் தனது பங்குகளை சசிகலா தரப்புக்கு மாற்றிக்கொடுத்துள்ளது. இதற்கான பணத்தையும் அவர்கள் பெற்றுக்கொண்டு விட்டார்கள். எனவே, ஓட்டல் விற்பனை என்பது முடிந்து விட்டது. இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் சோதனை நடத்திய போது, கண்டுபிடித்து இருக்கிறோம். நடந்த ஒப்பந்தங்களை மறைத்து முந்தைய ஓட்டல் பங்குதாரர்கள் தவறான தகவல்களை தருவதற்கு முயற்சிக்கிறார்கள். இது, பினாமி சொத்து என்ற அடிப்படையில் நடந்த பரிமாற்றம் என்பது உறுதியாகி உள்ளது.

எனவே, ஓட்டலை கைப்பற்றுவதற்கு பினாமி சொத்து சட்ட விதிகளின்படி உரிமை உள்ளது. எனவே ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, விசாரணையை வருகிற மார்ச் 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story