அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கு: ஆரம்பக்கட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வரக்கூடாது - லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கு: ஆரம்பக்கட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வரக்கூடாது - லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Feb 2020 10:45 PM GMT (Updated: 25 Feb 2020 10:38 PM GMT)

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகாரின் அடிப்படையில் நடத்தப்படும் ஆரம்பக்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவுக்கு கொண்டு வரக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், அறப்போர் இயக்க நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை போன்ற 112 பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்த பணிகள் வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. மேலும், ஒப்பந்தபடி இந்த பணிகளுக்கு ஆற்றுமணலை பயன்படுத்தாமல் ‘எம்-சாண்ட்’ பயன்படுத்தியது மட்டுமல்லாமல், ஆற்றுமணலுக்குரிய தொகையை மாநகராட்சியிடம் ஒப்பந்ததாரர்கள் வசூலித்துள்ளனர். இதனால் பெரும் தொகை ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழலில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என்று பலருக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே, அமைச்சரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஒரு எதிர் மனுதாரராக சேர்த்து மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

போலீஸ் தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்’ என்று கூறி அறிக்கையை தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் வி.சுரேஷ் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த ஆரம்பக்கட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வரக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று கூடுதல் விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story