மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு


மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 11:15 PM GMT (Updated: 25 Feb 2020 11:10 PM GMT)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளராக மூகாம்பிகா ரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

கட்சியின் நிர்வாகத்தை மேம்படுத்திட பல்வேறு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நியமனங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், நமது கட்சியில் சேர்ந்து, அதன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கடந்த 2 ஆண்டுகளாக முக்கிய பங்களித்து வரும் மகளிருக்கான பொறுப்புகள் தமிழகம் முழுமைக்கும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதன் தொடக்கமாக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளராக மூகாம்பிகா ரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூகத்தில் மக்கள் தொகையின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் இருக்கும் பெண்களின் கருத்தையும், செயல்திறனையும் கட்சிக்கு பயன்படுத்திக்கொள்வது அவசியமானது. அதைப்போன்று அவர்களுக்கான அங்கீகாரத்தையும் கட்சியில் அளிக்கவேண்டும் என்பதற்காக, பி.இ. பட்டதாரியான மூகாம்பிகா ரத்தினம் இந்த பொறுப்புக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவுசெய்து அறிவித்திருக்கின்றேன். இவர் பெண்கள் கல்வி குறித்து விழிப்புணர்வு, சமூகசேவை என பன்முகத்தன்மை கொண்டவர். அத்துடன் தற்போது விவசாயத்திலும் பெரும்பங்காற்றி வருகிறார்.

இவர் எல்லா வகையிலும் கட்சி வளர்ச்சிக்கும் கட்சியில் பெண்களுக்கான பங்களிப்பை பெற்றுத்தருவதிலும் முக்கிய பங்காற்றுவார். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இவருக்கு கட்சியின் அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மற்றும் கட்சியின் அனைத்து சார்பு அணியினர், கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story