விபசார பெண்ணாக சித்தரித்து நடிகைக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
விபசார அழகியாக சித்தரித்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ‘பீட்சா’ வினியோகம் செய்யும் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
பாதிக்கப்பட்ட அந்த நடிகை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் வசிக்கிறார். அஞ்சலி திரைப்படத்தில் மட்டும் சிறிய வேடத்தில் நடித்து உள்ளார். தற்போது, அவர் ஆடை அலங்கார நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஆன்-லைன் மூலம் ‘பீட்சா’ ஆர்டர் கொடுத்தார். பரமேஸ்வரன்(வயது 32) என்ற ஊழியர் ஆர்டர் கொடுத்த ‘பீட்சா’வை நடிகையின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று உள்ளார்.
தாமதமாக வந்ததாக புகார் கூறி ‘பீட்சா’ எடுத்துச்சென்ற ஊழியர் பரமேஸ்வரனை நடிகை கண்டித்து உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பரமேஸ்வரன் அந்த நடிகையை விபசார பெண்ணாக சித்தரித்து, அவரது செல்போன் எண்ணையும் பதிவிட்டு விருப்பம் உள்ளவர்கள் அதில் தொடர்பு கொள்ளலாம் என்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது.
இதனால், ஏராளமானோர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் பேசினர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவின் பேரில், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் ‘பீட்சா’ வினியோகம் செய்யும் ஊழியர் பரமேஸ்வரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
தீவிர விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story