அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு எச்சரிக்கை


அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு எச்சரிக்கை
x

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் அணியாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது .

சென்னை:

தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று புகார்கள் வந்தன.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு 16.7.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. 

இதை தொடர்ந்து  அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், அரசுத் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா 2018  ஆகஸ்ட் மாதம் அனுப்பிய கடிதத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது கண்டிப்பாக அணிவதை அந்தந்த துறையின் தலைவர் உறுதி செய்யவேண்டும் என்பதற்கான அறிவுரையை அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு கடந்த 16.7.2018 அன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் குறிப்பாக, பொதுமக்களிடம் நேரடியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அடையாள அட்டை அணிவது தொடர்பாக ஏற்கனவே அரசு விதி இருந்தால் அந்த விதியை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும், விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எனவே, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள ஆணையை பின்பற்றி அடையாள அட்டையை கண்டிப்பாக அனைத்து ஊழியரும் அணிய வேண்டும் என்று அவர்களுக்கு துறைத் தலைவர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

என்றாலும் அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நேரத்தில் அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று புகார்கள்  தொடர்ந்து வந்தன. இது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு செயலாளர் ஸ்வர்னா, அரசு துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்.

பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story