குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு


குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 11:33 AM GMT (Updated: 27 Feb 2020 11:33 AM GMT)

அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சிவமுத்து என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு கடந்த 1987-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின்படி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் எந்த ஓர் அனுமதியும் இல்லாமல் பலர் நிலத்தடி நீரை எடுக்கின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 420 ஆலைகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றனர். எனவே, அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபொழுது, சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீரின் அளவு குறைகிறது. எனவே, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் இழுத்து மூடவேண்டும்.

இந்த ஆலைகள் உரிய அனுமதியை எதிர்காலத்தில் பெற்றாலும், ஐகோர்ட்டு அனுமதியில்லாமல், இந்த ஆலைகள் இயங்க அரசு அனுமதிக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் அதிகாரிகள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்புடைய வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.  இதில், ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகிறோம் என அறிவித்து உள்ளது.  இதுபற்றி அந்த சங்கத்தின் தலைவர் முரளி கூறும்பொழுது, ஐகோர்ட்டு உத்தரவால் குடிநீர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

பிற தேவைகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும், குடிநீருக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் நீதிமன்றம் ஒருசேர பார்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.  இந்த வேலை நிறுத்தம் இன்று மாலை 6 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story