மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை - மு.க.ஸ்டாலின்
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (98). உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24-ந் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மார்ச்1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழினத்தில் நிரந்தரபேராசிரியரும், திமுகவின் பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கால் நூற்றாண்டு காலம், இந்த இனத்துக்கும் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியப்பெருமகனார் உடல்நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச்-1ம் நாள் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என் மீது அளவு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச்-1ம் தேதி அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச்சொல்ல வர வேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன்.
தமிழர் நலன்காக்க தன்னை ஒப்படைத்துக்கொண்ட பேராசிரியப்பெருமகனார் நலம்பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த
நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக்கொள்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story