என்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கையில் வேதியியல் தொடர வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


என்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கையில் வேதியியல் தொடர வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2020 8:45 PM GMT (Updated: 28 Feb 2020 5:39 PM GMT)

என்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கையில் வேதியியல் தொடர வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் இடம் பெற்று இருக்கின்றது. அண்மையில், இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு, மேல் நிலை வகுப்பில் வேதியியல் படித்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, வேதியியல் மதிப்பெண்களை கணக்கிட வேண்டியது இல்லை எனத் தெரிவித்து இருக்கின்றது.

இந்த அறிவிப்பு, கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மாணவர்களைக் கடுமையாகப் பாதிப்பதுடன், மேல் நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதியியல் பயிற்றுவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வேலை வாய்ப்பினை இழக்கவும் வழிவகுத்து இருக்கின்றது.

வேதியியல் கட்டாயப் பாடம் என்பது, என்ஜினீயரிங் கல்லூரிக்கான சேர்க்கைகளில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால், வேதியியல் விருப்பப் பாடம் இல்லை என்றால், அதனால், கலைக்கல்லூரிகளும், பி.எஸ்சி. வேதியியல் துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே, இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு வெளியிட்டு இருக்கின்ற அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, என்ஜினீயரிங் கல்விக்கான சேர்க்கைகளுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியலை கட்டாயத் தேர்வுப் பாடங்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story