பெண் நிர்வாகி பாலியல் புகார்: இந்து மகா சபா தலைவர் கைது


பெண் நிர்வாகி பாலியல் புகார்: இந்து மகா சபா தலைவர் கைது
x
தினத்தந்தி 2 March 2020 9:45 PM GMT (Updated: 2 March 2020 8:21 PM GMT)

பெண் நிர்வாகியின் பாலியல் புகார் மற்றும் பண மோசடி வழக்கில் ‘இந்து மகா சபா’ அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

‘அகில இந்திய இந்து மகா சபா’ என்ற அமைப்பின் தலைவராக ஸ்ரீகண்டன் செயல்படுகிறார். இந்த அமைப்பின் அலுவலகம் சென்னை கீழ்ப்பாக்கம், ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த அமைப்பின் பெண் நிர்வாகி நிரஞ்சனி, கடந்த ஜனவரி மாதம், ஸ்ரீகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

இந்த புகாருக்கு ஸ்ரீகண்டன் சார்பில் அவரது மனைவி பதிலடி புகார் மனு ஒன்றை கொடுத்தார். நிரஞ்சனி கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் ஸ்ரீகண்டன் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும், சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவரும் ஸ்ரீகண்டன் மீது ரூ.14 லட்சம் மோசடி புகார் கொடுத்தார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதற்கும், ரூ.14 லட்சம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை திருப்பிக்கேட்டதாகவும், அதை திருப்பி கொடுக்காமல் ஸ்ரீகண்டன் மிரட்டலில் ஈடுபட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த புகாரின் பேரிலும் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதை அறிந்ததும் ஸ்ரீகண்டன் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக இருந்த ஸ்ரீகண்டன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்குப்பின் அவரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார்.

Next Story