மக்கள் அச்சத்தை போக்க கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்


மக்கள் அச்சத்தை போக்க கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 March 2020 9:30 PM GMT (Updated: 5 March 2020 9:18 PM GMT)

மக்கள் மத்தியில் அச்சத்தை போக்க கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து மக்களிடம் ஒரு விதமான அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்கலாம் என்பதால், இது குறித்த கவலை தேவையில்லை.

இதுவும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்தான். ஆனால், கொரோனா வைரஸ்கள் சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ்களைப் போன்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றுபவை என்பதால் இவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். காய்ச்சல், சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

கொரோனா வைரஸ் தாக்கிய பிறகு 2 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தென்படக்கூடும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் கூடுமானவரை தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள வார்டுகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். ‘ஆன்டிபயாடிக்ஸ்’ மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் எந்த பயனும் இல்லை என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் உலகை அச்சுறுத்திய பிற வைரஸ் காய்ச்சல்களுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் காய்ச்சல் சற்று கடுமையானது என்றாலும் கூட, உயிரைக் காப்பாற்ற முடியாதது அல்ல. கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாலும், வதந்திகளாலும் தமிழக மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது.

கொரோனா வைரசை தவிர்த்தல் மற்றும் நோய்த் தொற்றினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுவான மருத்துவ அறிவுரைகள் ஆகியவற்றை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அச்சத்தை போக்க வேண்டும்.

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், பள்ளிகளுக்காக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து பள்ளிகளும் முழுமையாக கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story