பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததும் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கு இணைய வழியில் பயிற்சி - கல்வித்துறை தகவல்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததும், 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கு இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்களில் இலவச வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன.
இந்தநிலையில் 2020-21-ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருக் கிறது. இதற்கான பயிற்சி வகுப்புகளை பள்ளிக்கல்வி துறை தாமதமாக கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தொடங்கியது. 3 மாதங்களே நடந்த இந்த பயிற்சி வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.
பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வசதியாக இந்த பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக கல்வித்துறை சார்பில் கூறப்பட்டது. தாமதமாக ஆரம்பித்ததற்கும், இடையில் பயிற்சி வகுப்புகளை நிறுத்தியதற்கும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு பின், ‘இ-பாக்ஸ்’ எனும் நிறுவனம் இணையவழி வாயிலாக 412 பயிற்சி மையங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த இருக்கிறது. இதற்கான சோதனை முன்னோட்டம் வருகிற 17-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் பள்ளிகளில் சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைய வசதியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கான பயிற்சியை முதலில் ‘ஸ்பீடு’ என்ற நிறுவனமும், அதன்பிறகு, ‘ஈடூஸ் இந்தியா’ என்ற நிறுவனமும் அளித்தது. தற்போது ‘இ-பாக்ஸ்’ நிறுவனம் இணைய வழியில் வழங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story