கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்துவது எப்படி? - தமிழக சுகாதாரத்துறை விளக்கம்


கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்துவது எப்படி? - தமிழக சுகாதாரத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 15 March 2020 11:15 PM GMT (Updated: 15 March 2020 11:12 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தும் முறை பற்றி தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில், பஸ், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி கைகள் படும் இடங்களான இருக்கைகள், மேஜைகள், கதவுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், ரெயில், பஸ், கதவுகளின் கைப்பிடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

சினிமா தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சி முடிந்ததும் இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் தியேட்டரின் உட்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பஸ், ரெயில்களில் ஒரு வழித்தட பயணம் முடிவடைந்ததும் இருக்கைகள், கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் தரை தளங்களில் அவ்வப்போது கிருமி நாசினியை தெளித்து பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவ்வப்போது கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகம், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், பஸ், ரெயில் மற்றும் வாகனங்களில் ஒரு லிட்டர் கிருமி நாசினியில் 19 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும். மருத்துவமனை, ஆம்புலன்ஸ் போன்றவற்றில் ஒரு லிட்டர் கிருமி நாசினியில் 9 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும்.

எந்திர தெளிப்பான் போன்ற பல்வேறு வகையான தெளிப்பான்களை பயன்படுத்தி கிருமி நாசினியை தெளிக்கலாம். கிருமி நாசினியை தெளித்த பின்பு, ஈரமான துடைப்பானை(மாப்) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தொழில்நுட்ப விவரங்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள், நகர சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 94443-40496, 87544-48477 என்ற செல்போனிலும், 044-29510400, 29510500 என்ற தொலைபேசி எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனியார் பரிசோதனை கூடங்கள் கொரோனா வைரஸ் மாதிரி எடுக்கவோ, பரிசோதிக்கவோ கூடாது என்று அரசு உத்தர விட்டுள்ளது.

இதேபோல் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாடகை கார்கள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ரிக்‌ஷா போன்றவை தினமும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பயண முடிவின்போதும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து சுத்தம் செய்ய அறிவுறுத்துவதோடு, குளிர்சாதன பஸ்களை சுத்தப்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு கூற வேண்டும். பொது வாகனங்கள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் தினமும் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதாரத்துறை, மாநகராட்சி ஊழியர்கள், மற்ற அரசு துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகர பஸ்களில் உள்ளே, வெளியே, இருக்கைகள், ஜன்னல், கைப்பிடிகள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி மருந்துகள் அடிக்கும் பணி நேற்று முழுவீச்சில் நடைபெற்றது.

பஸ் நிறுத்த நிழற்குடைகள், இருக்கைகளை சுத்தம் செய்து மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி மருந்தை தெளித்துவிட்டனர். வணிக வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களிலும் கிருமி நாசினி மருந்து மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சென்னையில் பொது இடங்களில் தூய்மை பணிக்கு இடையே, ‘கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள்’ அடங்கிய நோட்டீசுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே ஒட்டி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Next Story