கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: வருகிற 31 ந்தேதி வரை புதுச்சேரியில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொடக்கப் பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.
புதுச்சேரி,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. எனவே நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி புதுவை மாநிலத்தில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு் வருகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாநில எல்லைகளில் பரிசோதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்திலும் வெளிநாட்டு பயணிகள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் (பிரிகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை) இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை)முதல் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
பள்ளி நிர்வாகங்கள் எக்காரணத்தை கொண்டும் மேற்கூறிய வகுப்புகளை நடத்தக்கூடாது. மீறும் பட்சத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா எனும் வைரஸ் தொற்றுநோயிலிருந்து சிறு குழந்தைகளை காக்கும் பொருட்டு, மறு அறிவிப்பு வரும் வரை, அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளி (எல்.கே.ஜி முதல் 5 வகுப்பு வரையிலான) மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story