வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் 16 மாவட்ட எல்லைகளில் பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்


வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் 16 மாவட்ட எல்லைகளில்  பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 16 March 2020 6:37 AM GMT (Updated: 16 March 2020 7:28 AM GMT)

வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் 16 மாவட்ட எல்லைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்

சென்னை

இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,69,420 ஆக உள்ளது. வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6515 ஆக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 77,450 ஆக உள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 110 ஆக உயர்ந்து உள்ளது.  உத்தரகாண்ட் தனது முதல் பாதிப்பையும் , மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒரு புதிய பாதிப்பும் பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இதுவரை 1,74,874 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். முககவசம் அணிய வேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் 16 மாவட்ட எல்லைகளில்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.பொது மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளுக்கு , வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என கூறினார்.

Next Story