திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வானால் அடுத்த பொருளாளர் யார்?


திமுக பொதுச்செயலாளராக  துரைமுருகன் தேர்வானால் அடுத்த பொருளாளர் யார்?
x
தினத்தந்தி 16 March 2020 7:04 AM GMT (Updated: 16 March 2020 7:04 AM GMT)

பொதுச்செயலாளராக துரை முருகன் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த பொருளாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை

திமுகவில் நீண்ட காலமாக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் சமீபத்தில் மறைந்ததை அடுத்து, புதிய பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி என்று பலரின் பெயர்கள் அடிபட்டன.

 43 ஆண்டுகள் பொதுச்செயலாளராக பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளர் யார் என  திமுகவில் கேள்வி எழுந்தது.  தி.மு.க.வில் கட்சி தலைவருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவியாகும். தற்போது இந்த பதவியை மு.க.ஸ்டாலின் கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வருகிறார்.

கட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.

துரை முருகனுக்கே அதிக வாய்ப்பு என்று கூறப்பட்ட நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக அவர்  தற்போது பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 29-ம் தேதி பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது, துரை முருகன் அந்தப்பதவிக்கு போட்டியிட கடிதம் மூலம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, பொருளாளர் பதவியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். இதனால், வரும் 29-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆகும் பட்சத்தில் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவி டி.ஆர். பாலு அல்லது ஐ.பெரியசாமிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story