இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது


இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 16 March 2020 8:45 PM GMT (Updated: 16 March 2020 7:22 PM GMT)

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு ஜூன் 3-ந்தேதி தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உ‌ஷாராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை, 

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் எனப்படும் தொடக்க கல்வி பட்டய தேர்வுகள் வருகிற ஜூன் 3-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் அறிவுரைகளை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து, வசிக்கும் மாவட்டம் அருகேயுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட நிறுவனங்களிலேயே ‘வெப் கேமரா’ வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்பு, அங்கேயே தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். இதற்கு தேர்வர் நேரில் செல்ல வேண்டும்.

வருகிற 30-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை தேர்வுக்கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது. தகுதியற்ற விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும், தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story