2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் காரசார விவாதம்


2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் காரசார விவாதம்
x
தினத்தந்தி 16 March 2020 9:15 PM GMT (Updated: 16 March 2020 7:46 PM GMT)

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தொடர்பாக, சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. கொறடா சக்கரபாணி (ஒட்டன்சத்திரம் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் சக்கரபாணி:- உள்ளாட்சிகளுக்கான நிதி பகிர்வு 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. 27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்கள் பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று வழங்க வேண்டும். 2011-ம் ஆண்டு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஆனால், வீடுகள் கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் சோலார், பேட்டரி கொடுக்கவில்லை. நீங்கள் கொடுத்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் போதாமல் வீடு கட்டியவர்கள் கடனாளியாகிவிட்டார்கள்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- உங்கள் (தி.மு.க.) ஆட்சியில் தான் வீடு கட்டியவர்கள் கடனாளியானார்கள். நீங்கள் (தி.மு.க.) ரூ.70 ஆயிரம் தான் அப்போது கொடுத்தீர்கள். இப்போது, சோலார் வைப்பதற்கான நிதியையும் வீடு கட்டுவதற்கான நிதியுடன் சேர்த்து வழங்க முதல்-அமைச்சர் முடிவு செய்துள்ளார். இதுவரை 16 லட்சத்து 36 ஆயிரம் வீடுகளை அ.தி.மு.க. அரசு கட்டி கொடுத்துள்ளது.

அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.11 ஆயிரம் கோடி நிதியை பெற்றுத் தந்துள்ளோம். தி.மு.க. ஆட்சி காலத்தில், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ரூ.9,264 கோடி மத்திய அரசிடம் பெறப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.19,893 கோடி நிதி பெறப்பட்டது.

உறுப்பினர் சக்கரபாணி:- 300 சதுரடி நிலத்தில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் செலவில் எப்படி பசுமை வீடு கட்ட முடியும்?. அரசே அதை கட்டிக் கொடுத்தால் என்ன?.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- மத்திய அரசு கொடுக்கும் நிதி ரூ.72 ஆயிரத்துடன், மாநில அரசு நிதி ரூ.98 ஆயிரத்தையும் சேர்த்து பசுமை வீடுகள் கட்டும் திட்டத்திற்கு கொடுக்கிறோம். இனி ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் கொடுக்கும் அளவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உறுப்பினர் சக்கரபாணி:- உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, உள்ளாட்சி நிதி குடிமராமத்து திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. என்றாலும், உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் அதிக இடங்களை பெற்றோம். மாவட்ட கவுன்சிலர்களில் 243 இடங்களிலும், ஒன்றிய கவுன்சிலர்களில் 2,100 இடங்களிலும் வெற்றி பெற்றோம். உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு போதுமான அளவு நிதி வழங்க வேண்டும்.

இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்சியின்போது, உள்ளாட்சி தேர்தல் பிரித்து நடத்தப்பட்டது கிடையாது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீங்களே (அ.தி.மு.க.) வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதாக சொல்கிறீர்கள். இந்த ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது நாடாளுமன்ற தேர்தல் முடிவை வைத்து தெரியும். மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் இருந்ததை மறைமுக தேர்தல் என்று நீங்கள் மாற்றுனீர்கள். பயம் தானே?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- பயம் எதுவும் எங்களுக்கு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் நீங்கள் (தி.மு.க.) வெற்றி பெற்றீர்கள். சரி, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தீர்கள். மக்கள் உண்மையை புரிந்து கொண்டதால், எங்களுக்கு வெற்றியை தந்தார்கள். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் நீங்கள் (தி.மு.க.) வெற்றி பெற்றீர்கள். எங்களுக்கு மக்களிடம் செல்வாக்கு கூடியதே தவிர குறையவில்லை.

நாடாளுமன்ற தேர்தலின்போது நீங்கள் கவர்ச்சிகரமான, நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொல்லி வெற்றி பெற்றீர்கள். எனவே, எங்களுக்கு என்றைக்கும் சரிவு இல்லை. வெற்றி தான்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- கவர்ச்சிகரமான அறிவிப்புகளை சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதாக தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். அதற்கு ஒரு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். அதன்பின்னர், நாடாளுமன்ற தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை, திட்டங்களை நிறைவேற்றுவோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அப்படி என்றால், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது சொல்ல வேண்டிய வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தலின்போது கூறியது ஏன்?. ஆட்சியில் இல்லாதபோது நிறைவேற்ற முடியாத திட்டங்களை எப்படி கூற முடியும்?.

(இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் கருத்து ஒன்றை தெரிவித்தார். இதைப்பார்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபமடைந்தார். ஆவேசமாக அவருடன் நேரடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நான் என்ன கூறினேன். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கூற வேண்டிய வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தலின்போது முன்கூட்டியே கூறியது ஏன்? என்று கேட்டேன். நாடாளுமன்ற தேர்தலின்போது, மத்திய அரசின் நிதியை முறையாக பெற்று மாநில திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று சொல்லலாம். ஆனால், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டீர்கள். விவசாய கடன் தள்ளுபடி என்றீர்கள். கூட்டுறவு கடன் தள்ளுபடி என்றீர்கள். அது எப்படி முடியும்?. தனியார் வங்கி கடனையும் தள்ளுபடி செய்வதாக சொன்னீர்கள். அதை எல்லாம் நம்பி மக்கள் வாக்களித்தார்கள். பின்னர், உண்மையை புரிந்துகொண்டு தான், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தந்தார்கள். எனவே, 2021-ம் ஆண்டு யாரை ஆட்சிக்கு கொண்டு வருவது என்று மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story