குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 March 2020 9:30 PM GMT (Updated: 16 March 2020 7:56 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். சட்டம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடந்தி வரும் நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அதில் கலந்து கொண்ட அமைப்புகளின் நிர்வாகிகள், எடுத்து வைத்திருக்கும் சந்தேகங்கள், அதில் சொல்லிருக்கும் அம்சங்கள் என்ன என்பதை இந்த அவை தெரிந்துகொள்ள விரும்புகிறது.

அதற்குத் தலைமைச் செயலாளர் என்ன விளக்கம் தந்திருக்கிறார் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவிப்பதைக் கடமையாக நான் கருதுகிறேன். எனவே, இஸ்லாமியப் பெருமக்கள் எடுத்து வைத்திருக்கக்கூடிய அந்த கருத்துகளை இந்த அவையில் தெரிவிப்பது கடமை என மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன்.

இஸ்லாமியத் தலைவர்களை மட்டும் தலைமைச் செயலாளர் அழைத்துப் பேசியிருப்பது, ஒரு கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் பாதிக்கப்படக் கூடியது இஸ்லாமியப் பெருமக்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மக்கள். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இந்த சட்டத்தால் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

அச்ச உணர்வோடு இருந்து கொண்டிருக்கிறார்கள். இதையும் கருத்தில் கொண்டு தலைமைச் செயலாளர் கூட்டிய கூட்டத்தைப் போல ஏதோ ஒரு தனிப்பட்ட அமைப்பை மட்டும் அழைத்துப் பேசாமல், இதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னால், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டி, இதுகுறித்து விவாதித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது குறித்து அவர்களிடம் தலைமை செயலாளர் சொல்லியிருக்கிறார். மேலும் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கெல்லாம் தலைமை செயலாளர் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பு புதியதாக நடைபெறவில்லை என்பதையும் ஏற்கனவே உள்ள நடைமுறைபடி தான் நடக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். புதிய அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரியும் இந்த விஷயத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எந்தவொரு ஆவணமும் கேட்கப்படாது என்றும், விவரங்கள் இல்லையென்றால் நீங்கள் அளிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும் ‘டி’ பிரிவு இடம் பெறாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

எனவே இது குறித்து சிறுபான்மை இன மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் ஏற்பட்டு இருக்கிற அந்த அச்சத்தை குறைக்கின்ற வகையிலும், பதற்றத்தை தணிக்கின்ற வகையிலும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுகின்ற வகையிலும், தமிழ்நாட்டில் இருக்க கூடிய அனைத்து மக்களையும் காப்பாற்றுகின்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் அறிவுரையோடு தலைமை செயலாளர் இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். அங்கு நடந்த விவரத்தை இங்கே நான் சொல்லி விட்டேன்.

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கலாம் என்று கூறுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். எனவே அனைத்து கட்சி கூட்டம் தேவையா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எங்களை பொறுத்தவரையில் சிறுபான்மை இன மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அரணாக இருப்போம். இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை. சிறுபான்மையின மக்கள் எங்கள் உறவு, எங்கள் ரத்தம். இது உங்கள் தேசம். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story