தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: "அடித்து ஆடுகிறார் எடப்பாடியார்" கவிஞர் தாமரை பாராட்டு


தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை:  அடித்து ஆடுகிறார் எடப்பாடியார் கவிஞர் தாமரை பாராட்டு
x
தினத்தந்தி 17 March 2020 12:15 PM GMT (Updated: 17 March 2020 12:15 PM GMT)

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது இதற்கு கவிஞர் தாமரை பாராட்டு தெரிவித்து உள்ளார்.

சென்னை

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் வகையிலான சட்டமசோதாவை நேற்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக் கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை தமிழ்வழி கல்வி மூலம் பயின்று இருக்க வேண்டும்.

அதேபோன்று 10-ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இருந்த சட்டத்தில், இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க அவசியம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இனி தமிழ்வழியில் கல்வி பயின்றால் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கவிஞர் தாமரை பேஸ்புக் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அடித்து ஆடுகிறார் எடப்பாடியார். தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு. தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும் !

தமிழ் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முதன்மையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எந்த மொழிச்சிக்கலும் இல்லா வண்ணம் நடத்தப்படுவதே சிறந்த மக்களாட்சி !.

இது சிலருக்குக் கசப்பாக இருக்கக் கூடும்.'தமிழ்நாட்டில் தமிழ்' என்றுதானே கேட்கிறோம். ஆந்திராவில் தமிழ், கர்நாடகத்தில் தமிழ்,கேரளத்தில், ம.பி, உ.பி, பஞ்சாப், ஹரியானாவில் ஆட்சிமொழி தமிழென்றா கேட்கிறோம். அப்புறம் ஏன் கசக்க வேண்டும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே. நம் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, யாரையும் வாழ வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என அறிக. 

நம் மொழிப்பற்றை, மொழி வெறியாகத் திரித்தால் அது திரிப்பவர்களின் பிரச்சினை, நம் பிரச்சினையில்லை.

பி.கு : அப்படியே இந்த வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமானநிலையம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழை, தமிழரை உறுதிப்படுத்துக. தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும்/அடையும் அனைத்து வானூர்திகளிலும் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும். உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story