தமிழகம் முழுவதும் 8,600 பள்ளிகளில் சுற்றுச்சுவர் - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


தமிழகம் முழுவதும் 8,600 பள்ளிகளில் சுற்றுச்சுவர் - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2020 9:15 PM GMT (Updated: 17 March 2020 9:03 PM GMT)

தமிழகம் முழுவதும் 8,600 பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு நிதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

சட்டசபையில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா(மன்னார்குடி), ‘மன்னார்குடி ஒன்றியம், வடபாதி பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அங்கே வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். கஜா புயலால் ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் பள்ளிக்கட்டிடம் முழுவதுமாக சேதம் அடைந்தது. நீடாமங்கலத்தில் உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்து வருகிறது. ராயபுரம் ஊராட்சியில் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்திற்கு அடியில் இருந்து படித்து வருகிறார்கள். எனவே அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்து கூறியதாவது:-

நீடாமங்கலத்தில் இருக்கின்ற பள்ளிகள் சுற்றுச்சுவர்கள் சரியாக இல்லை, சுற்றுச்சுவர் இல்லாததால் அங்கே பல தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உறுப்பினர் கூறியுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சரால் இந்த ஆண்டு 1,600 உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கும், 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் நிதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தும்போது, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்காது. மேலும் ஸ்மார்ட் கிளாஸ் இந்த ஆண்டு 7,500 பள்ளிகளுக்கு கொண்டு வருவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. எனவே உறுப்பினர் குறிப்பிடும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story