கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக முஸ்லிம்கள் போராட்டத்தை ஒத்திவைக்க கமல்ஹாசன் கடிதம்


கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக முஸ்லிம்கள் போராட்டத்தை ஒத்திவைக்க கமல்ஹாசன் கடிதம்
x
தினத்தந்தி 17 March 2020 10:00 PM GMT (Updated: 17 March 2020 9:43 PM GMT)

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக முஸ்லிம்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினரிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக போராட்டத்தை ஒத்திவைக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சத்திலும், குழப்பத்திலும் இருக்கும் மக்கள் களம் இறங்கி போராடுவதற்கு என் ஆதரவை தெரிவித்தேன். என்னை வந்து சந்தித்த முஸ்லிம் அமைப்பினரிடம் போராட்டத்தை நிறுத்திவிடாதீர்கள். வன்முறையற்ற போராட்டமாக அது தொடர வேண்டும் என்று கூறியிருந்தேன்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதுதான் பாதுகாப்பு என மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். நீங்கள்(போராட்ட குழுவினர்) எனது குடும்பம். உரிமைக்கான இந்த போராட்டம் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட உங்கள் அனைவரின் பாதுகாப்பும், நலனும் மிகவும் முக்கியம். நீங்கள் உடல் நலத்துடன் இருந்தால்தான் உரிமைக்கான உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இப்போது போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, மீண்டும் நிலைமை சீரானதும் நம் எதிர்ப்பை முன்பைவிட தீவிரமாக காட்டுவோம். அப்போதும் நான் உங்களுடன் இருப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியா தலைமையிலான நிர்வாகிகள் போராட்ட குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

Next Story