சென்னையில் ரூ.4,300 கோடி செலவில் 42 லட்சம் மின் இணைப்புகளுக்கு ‘ஸ்மார்ட் மீட்டர்’ வசதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சென்னையில் ரூ.4,300 கோடி செலவில் 42 லட்சம் மின் இணைப்புகளுக்கு ‘ஸ்மார்ட் மீட்டர்’ வசதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 March 2020 6:55 AM GMT (Updated: 20 March 2020 6:55 AM GMT)

சென்னையில் ரூ.4,300 கோடி செலவில் 42 லட்சம் மின் இணைப்புகளுக்கு ‘ஸ்மார்ட் மீட்டர்’ வசதி செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எரிசக்தி துறை சார்பில், பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தடையற்ற மின்சாரம் என்பது நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. நடப்பாண்டில், எரிசக்தி துறையால் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மின் திட்டங்கள் பற்றி இந்த அவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வருவாயை பெருக்கவும், மின் நுகர்வோர்களுக்கு நிறைவான சேவையை வழங்கவும், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை குறைப்பதற்கும், வினைத்திறன்மிகு மின் அளவிகள்(ஸ்மார்ட் மீட்டர்) பொருத்தும் திட்டம் ஒன்று சென்னை மாநகரத்தில் உள்ள சுமார் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு, ரூ.4,300 கோடி செலவில் முதலில் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும். பெருகிவரும் மின் சுமையை ஈடு செய்யும் பொருட்டு, மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாகவும், கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மற்றும் மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களாகவும் தரம் உயர்த்தப்படும்.

சிவகங்கை மாவட்டம் அரசனூரில் ஒரு புதிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

இவைதவிர, தடையில்லா மின்சாரத்தை மின் நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்கிடும் பொருட்டு, 22 எண்ணிக்கையிலான 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பணிகள் ரூ.1,998 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இயற்கை சீற்றங்களின்போது கடலோர மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, அதனால் மின் வினியோகம் தடைபடும் சூழ்நிலை உருவாகிறது.

இதனை களைந்து சீரான மின் வினியோகத்தை உறுதி செய்யும் வகையில், திருவள்ளூர், காஞ்சீபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் பாதைகளில், சுமார் 200 கிலோ மீட்டர் நீள பாதை, ரூ.300 கோடி செலவில் புதைவடங்களாக மாற்றப்படும்.

மின் பகிர்மான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த, 23 இடங்களில் புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், செயல்பாட்டில் இருக்கும் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் உள்ள 13 மின் மாற்றிகள் கூடுதலாகவோ, திறன் உயர்த்தியோ, அமைக்கப்படும். இப்பணிகள் ரூ.187 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story