கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது - தமிழக அரசு அறிவிப்பு


கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 20 March 2020 2:15 PM GMT (Updated: 20 March 2020 2:19 PM GMT)

கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்  தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேச  மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள வாகனப்போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக நாளை முதல் 31-03-2020 வரை மூடப்படுகிறது.

இந்த சாலைகளில் கீழ்கண்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

1) அத்தியாவசியப்பொருட்களான பால், பெட்ரோலியம், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்கள்.

2) இதர சரக்கு வாகனங்கள்.

3) தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்.

4) பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள்.

எனினும் இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். 

வாகனங்களும் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். நாட்டின் நலன்கருதி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story