தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு


தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2020 10:09 AM GMT (Updated: 23 March 2020 10:09 AM GMT)

கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க அனைத்து காவல் ஆணையர்களுக்கும், கலெக்டர்களுக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில்  கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க  அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் முதல்-அமைச்சர் பழனிசாமி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* கொரோனா எதிரொலி: தமிழகத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* 144 தடை உத்தரவை அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

* மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் செயல்பட எந்த தடையும் இல்லை.

* கொரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

* மாவட்ட எல்லைகள், மூடப்பட்டாலும், காய்கறி, பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லட் தடையில்லை.

* அத்தியாவசிய ப்பணிகளை மேற்கொள்வோர் தங்களது பணிகளை தொடரலாம்.

* அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும். மருந்தகங்கள், உணவகங்கள் செயல்பட அனுமதி.

* பேருந்துகள், டாக்சி, ஆட்டோக்கள், இயங்காது.

* மருந்து அத்தியாவசிய பொருள் தயாரிப்பு ஆலை இயங்கலாம்.

* ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர காவல்துறை அனுமதி தேவை.

* அத்தியாவசியத்துறைகள் மற்றும் அலுவலகப்பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

* தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.

* மாவட்ட எல்லைகள் மூடப்பட்டாலும், காய்கறி, பால், உள்ளிட்ட அத்தியாவசியபொருட்களை கொண்டு செல்ல தடையில்லை.

* சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அனைத்து மாவட்டமும் முடக்கப்படுகிறது.

* குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 144ன் கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

* அத்தியாவசிய கட்டிடம் பணிகள் தவிர பிற கட்டிடம் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் இயங்கும்.

* தனியார் நிறுவனங்கள், ஐ.டி.ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று (மார்ச் 23) இரவு 9 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், தடை காலத்தில், உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு ஊரடங்காக மாறிய நிலையில் தற்போது தமிழகத்தில் 144 தடை அமலாகிறது.

Next Story