கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்கள் பாதிப்பு: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்கள் பாதிப்பு: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 23 March 2020 8:30 PM GMT (Updated: 23 March 2020 7:04 PM GMT)

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதுடன், வங்கிக் கடனும் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

பேரழிவு நோயாகவும், பெருந்தொற்று நோயாகவும் உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் நோய் மருத்துவ அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் மதிப்பிட முடியாத பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பொருளாதார இழப்பீடும் முக்கியமாகும்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக பயணத்தை தவிர்த்து விட்டதால் வாடகை வாகனங்களின் இயக்கம் முடங்கிவிட்டது. இதனால் அதை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் அனைவரும் உணவு மற்றும் அன்றாடச் செலவுகளுக்கே சிரமப்படும் நிலையில், அவர்களால் வாகனக் கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவது என்பது எந்த வகையிலும் சாத்தியமற்ற வி‌‌ஷயமாகும்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. பா.ம.க.வும் இதை வலியுறுத்தி வருகிறது. பிரதமர் அறிவித்த ஊரடங்கில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று முழுமையான வெற்றி பெற வைத்தனர். அடுத்து அறிவிக்கப்படும் ஊரடங்குகளும் மக்களின் முழுமையான ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெறும். அவ்வாறு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு, ஏற்கனவே பெரும்பான்மை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

அமைப்பு சார்ந்த பணியாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான மாதத்தவணைகளை அடுத்த சில மாதங்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவற்றை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதுடன், அக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும். காப்பீட்டுக்கான பிரிமியம், கடன் அட்டை தவணைகள், குழந்தைகளுக்கான பள்ளிக்கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதுடன், வங்கிக் கடனும் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story