ரூ.6,400 கோடிக்கு துணை பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்


ரூ.6,400 கோடிக்கு துணை பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்
x
தினத்தந்தி 23 March 2020 10:45 PM GMT (Updated: 23 March 2020 10:06 PM GMT)

2019-2020-ம் ஆண்டுக் கான கூடுதல் செலவுக்காக ரூ.6,409 கோடிக்கு துணை பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2019-2020-ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

2019-2020-ம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.6,408.82 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது. இதில் ரூ.5,732.06 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.676.76 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும். ஜனவரி 9-ந்தேதி 2-வது துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், புதுப்பணிகள், புது துணைப்பணிகள் செலவினங்களுக்கு இது ஒதுக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ், அரசு பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்வதற்கு ரூ.231.07 கோடியும், இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ.160.56 கோடியும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூ.123.39 கோடியும் ஒதுக்கப்படுகிறது.

கடலோர பேரிடர் ஆபத்து குறைப்புத் திட்டத்தின் கீழ், நெகிழ்திறன் சூறாவளி மின் வலையமைப்புகளை நிறுவுவதற்காக ரூ.113.98 கோடியும், இயற்கை சீற்றங்கள் துயர் தணிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.193.55 கோடியும் ஒதுக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ.60 கோடியும், தேசிய ஆயுஷ் குழுமம், தேசிய ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார இயக்கங்கள் போன்ற திட்டங்களுக்காக ரூ.299.93 கோடியும், அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ரூ.153.28 கோடியும் ஒதுக்கப்படுகிறது.

5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்காக ரூ.112.14 கோடியும், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக ரூ.140.57 கோடியும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துக் காக ரூ.198.37 கோடியும் கூடுதலாக அனுமதித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். குரல் வாக்கெடுப்பின் மூலம் துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டது.

Next Story