தமிழகத்துக்கு சிறப்பு நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் கோடி வேண்டும் - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்


தமிழகத்துக்கு சிறப்பு நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் கோடி வேண்டும் - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 25 March 2020 10:20 PM GMT (Updated: 25 March 2020 10:20 PM GMT)

தமிழகத்துக்கு சிறப்பு நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொடிய கொரோனா வைரசிடம் இருந்து இந்திய மக்களை காப்பாற்றுவதற்காக நீங்கள் தைரியமான முடிவை எடுத்ததற்காக உங்களை வாழ்த்துகிறேன். தமிழகத்தில் 24-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை சென்றடையச் செய்வதோடு, ஊரடங்கு உத்தரவையும் முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசத்தைக் காக்கும் பணியில் மத்திய அரசுடன் தமிழக அரசு உறுதியாக இணைந்து நிற்கிறது.

கொரோனா வைரசை எதிர்க்கும் நடவடிக்கையாக சுகாதாரத் துறையை பலப்படுத்தும் வகையில், தனிமைப்படுத்தும் வசதிகளை உருவாக்குவது, வெண்டிலேட்டர் வசதிகளை அளிப்பது, தனிப்பட்ட நபரை பாதுகாக்கும் உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடியை சிறப்பாக ஒதுக்கி நீங்கள் அறிவித்து இருப்பதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.

தமிழகத்திலும் சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நானும் குறிப்பிட்ட அளவு நிதியை அறிவித்துள்ளேன். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 10 ஆயிரம் படுக்கைகளை அமைத்துள்ளோம்.

கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை தர தனியார் மருத்துவமனைகளையும் தயார்படுத்த வேண்டியதுள்ளது. சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக பல தேவைகள் எழுந்துள்ளன.

அந்த வகையில், தேவையான உபகரணங்கள், மருந்துகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை வாங்கி சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்கு ரூ.3 ஆயிரம் கோடி தொகையை ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு மேலாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால் மாநிலத்தின் பொருளாதார நிலை சரிந்துவிடும் ஆபத்து உள்ளது. மார்ச் மாதம் 31-ந்தேதி வரையிலான ஊரடங்கை முன்னிட்டு, ஏப்ரல் மாத ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது, நிவாரண உதவித் தொகையாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு உடனடியாக ரூ.3,280 கோடி தொகையை ஒதுக்கி இருக்கிறேன்.

இந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தினக்கூலிகள் உள்ளிட்ட ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் கடுமையான நெருக்கடியை சந்திக்கின்றன. சரியான நேரத்தில் அவர்களுக்கு உதவிகளை செய்யாவிட்டால் நிலைகுலைந்துவிடுவார்கள். மேலும் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றுவோருக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் ரூ.500 கோடியும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்புக்கான நிவாரண உதவிகளை அளிக்க ரூ.500 கோடியும் அனுமதிக்க வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் வருவாய் இழப்பாலும், கடன், வட்டி சுமையாலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. எனவே அவர்களின் கடன் செலுத்தும் விவகாரங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். இரண்டு காலாண்டுக்கான வட்டி மற்றும் அபராதம் நீக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் சிறப்பு நிவாரண உதவி நிதியாக ரூ.4 ஆயிரம் கோடியையும், நிவாரண உதவிகளையும் உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story