தடையை மீறி வாகனம் ஓட்டினால் சட்டப்படி நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் பேட்டி


தடையை மீறி வாகனம் ஓட்டினால் சட்டப்படி நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 25 March 2020 10:30 PM GMT (Updated: 25 March 2020 10:24 PM GMT)

சென்னையில் உரிய அடையாள அட்டை இல்லாமல் வாகனம் ஓட்டி செல்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை, 

சென்னை நகரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்குள் வருவோர்களை தடுக்க சென்னை மாநகர எல்லை பகுதிகளில் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்காக வாகனங்களில் செல்வோர்கள், எதற்காக செல்கிறோம் என்பதை கூறி உரிய அடையாள அட்டையை காட்டினால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உதாரணமாக, மின்சாரத்துறை ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் போன்றோர் உரிய அடையாள அட்டையை காட்டினால், அவர்கள் வாகனங்களில் செல்வதற்கு தடையில்லை.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வாகங்களை ஓட்டி செல்வோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

கொரோனா வைரஸ் தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். வதந்தி பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பூந்தமல்லி பகுதியில் 11 பேர் இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்து வீட்டில் தனிப்படுத்தப்பட்டவர்கள், யாராவது சுதந்திரமாக வெளியில் சுற்றினால், அவர்களை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேர் கோயம்பேடு பகுதிகளில் இருந்து தப்பி சென்று விட்டனர். அவர்களை பிடித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை நகரை பொறுத்தமட்டில் 144 தடை உத்தரவை செயல்படுத்த பொது மக்கள் மத்தியில் நல்ல ஒத்துழைப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் தடையை மீறி நடப்பவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி இனிமேலும் தடையை மீறினால் சட்டப்படி நடவடிக்கை பாயும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story